

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, சைப்ரஸில் நடைபெறவுள்ள 2026 ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்கப் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி தெரிவித்துள்ளார்.
"எந்த ஒரு போட்டியும், அது எவ்வளவு முக்கியமானது என்றாலும், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு மேலானது அல்ல. அமைப்பாளர்கள் பாதுகாப்பு உறுதி அளித்த போதிலும், தற்போதைய சூழலில் என்னால் முழுமையாக பாதுகாப்பாக உணர முடியவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொனேரு ஹம்பி விலகியதை அடுத்து, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் இந்தப் போட்டியில் அவருக்குப் பதிலாகப் பங்கேற்பார் என்று சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு முறையான காரணம் இன்றி விலகினால், 10,000 யூரோக்கள் (சுமார் ரூ.10.8 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஹம்பியின் விஷயத்தில் அபராதம் விதிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்தப் போட்டி மார்ச் 28 முதல் ஏப்ரல் 16 வரை சைப்ரஸின் பாஃபோஸ் நகரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வைஷாலி ரமேஷ்பாபு மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் தொடர்ந்து பங்கேற்க உள்ளனர்.