

3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் அறிமுக போட்டிக்காக காத்திருக்கும் சூர்யவன்ஷியின் சமூக வலைத்தள போஸ்ட், இன்றைய போட்டியில் அவர் அறிமுகமாகலாம் என்பதை மறைமுக காட்டுவது போல் உள்ளது.
இந்திய டி20 அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றுள்ளது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 15 வயதான சூர்யவன்ஷி அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அறிமுகமாகவில்லை. இந்த தொடரில் இந்தியா 0-2 என படுதோல்வியை சந்தித்தது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை.
தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியிலும் சூர்யவன்ஷி களம் இறக்கப்படவில்லை. இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அறிமுகம் தாமதமாகி வருகிறது. இந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை.
இந்த நிலையில்தான் இன்று இந்தியா 2-வது போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலாவது சூர்யவன்ஷி அறிமுகம் ஆவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே சூர்யவன்ஷி தனது சமூக வலைத்தள பக்கத்தில் New Chapter (புதிய அத்தியாயம்) எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கிரிப்டிக் போஸ்ட்-ஐ பார்க்கும் போது, அவர் அறிமுகமாக இருப்பதை மறைமுகமாக கூறுகிறாரா? என்று தோன்றுகிறது.
இன்றைய போட்டியில் அவர் அறிமுகம் ஆனால், குறைந்த வயதில் இந்திய சீனியர் அணியில் அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து தொடர் நாயகன் உள்பட பல்வேறு விருதுகளை வென்றார்.
இலங்கையில் நடைபெற்ற ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.