U19 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை 84 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்தனர்.சௌமி பாண்டே நான்கு விக்கெட்டுகள் சாய்த்தார்.
U19 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை 84 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
Published on

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா- வங்காளதேசம் அணிகள் இன்றைய ஆட்டத்தில் மோதின. இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என நோக்கத்துடன் களம் இறங்கின.

டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடங்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் கிங் ஒரு பக்கம் சிறப்பாக விளையாட மறுபக்கம் அர்ஷின் குல்கர்னி (7), முஷீர் கான் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு ஆதர்ஷ் சிங் உடன் கேப்டன் உதய் சஹாரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தியது. ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரின் அரைசதங்களால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி சார்பில் மரூஃப் மிரிதா 5 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களம் இறங்கியது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அரிஃபுல் இஸ்லாம் 41 ரன்களும், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் 167 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சௌமி பாண்டே 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா 25-ந்தேதி அயர்லாந்தையும், 28-ந்தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com