T20 World Cup Final | கடைசி ஓவரில் 24 ரன் விளாசிய ஷிவம் துபே- நியூசிலாந்துக்கு 256 ரன்கள் இமாலய இலக்கு

ஷிவம் துபே கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் விளாசினார்.16 முதல் 19 ஓவர் வரை இந்தியா 27 ரன்கள் மட்டுமே கிடைத்தன.
T20 World Cup Final | கடைசி ஓவரில் 24 ரன் விளாசிய ஷிவம் துபே- நியூசிலாந்துக்கு 256 ரன்கள் இமாலய இலக்கு
Published on

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா 18 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 98 ரன்கள் குவித்தது.

அடுத்து சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது, இதனால் இந்தியா 7.2 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்தியா 11.3 ஓவரில் 150 ரன்களைத் தொட்டது.

ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

இந்தியா 15 ஓவரில் 204 ரன்களைத் தொட்டது. இந்தியா 300 ரன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

16-வது ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். 5-வது பந்தில் இஷான் கிஷன் 25 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.

அடுத்த ஓவரை டஃபி வீசினார். திலக் வர்மா கொடுத்த கேட்சை ஃபின் ஆலன் பிடிக்க தவறினார். பிடித்திருந்தால் திலக் வர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருப்பார்.

19-வது ஓவரை ஹென்றி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய ஹர்திக் பாண்ட்யா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது.

6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். இந்தியா 16 முதல் 19 ஓவர் வரை 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே அடித்தது.

கடைசி ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய துபே, அடுத்த 2 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். 4-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட இந்தியாவுக்கு இந்த ஓவரில் 24 ரன்கள் கிடைத்தன.

இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது. ஷிவம் துபே 8 பந்தில் 26 ரன்களும், திலக் வர்மா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com