

இந்திய டி20 அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது. முதல் போட்டி இன்று பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அயர்லாந்து முதலில் களம் இறங்கியது. கேப்டன் லார்கன் டக்கர் (50), டெலானி (49) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஷிவம் துபே 2 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இறங்கினர். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 20 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் சஞ்சு சாம்சன் (5), இஷான் கிஷன் (1), ஷ்ரேயாஸ் அய்யர் (3), திலக் வர்மா (19), வாஷிங்டன் சுந்தர் (9) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
7-வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். அப்போது 48 பந்தில் 84 ரன்கள் தேவைப்பட்டன. 16-வது ஓவரின் கடைசி பந்தில் துபே 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 4 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டன. 17-வது ஓவரில் அக்சர் படேல் (15) ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா 18.5 ஓவரில் 148 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.