ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி மட்டுமே நிகழ்த்திய அரிய சாதனை

சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி மட்டுமே நிகழ்த்திய அரிய சாதனை
Published on

கொழும்பு:

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட், சரித் அசாலங்கா 4 விக்கெட், மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் செய்தனர். இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியை ஆல் அவுட் செய்ததன் மூலம் இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது எதிரணியை தொடர்ச்சியாக 14 முறை ஆல் அவுட் செய்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com