

சென்னை:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் அடுத்த 2 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றது.
இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் கானர் எஸ்டர்ஹூய்ஸ் 75 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என வென்றது.