

திருவனந்தபுரம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர். ரிச்சா கோஷ் 40 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும் 10,000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீராங்கனை ஆனார். இந்தப் பட்டியலில் மிதாலி ராஜ் 10868 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 10,000 ரன்களைக் கடந்த 4வது வீராங்கனை ஆவார்.