மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்- குட் நியூஸ் சொன்ன பிசிசிஐ

விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.தான், நலமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எக்ஸ் தளத்தில் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்- குட் நியூஸ் சொன்ன பிசிசிஐ
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சில நாட்களிலேயே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்கானிப்பில் இருந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் அவர் குணமடைந்ததில் பிசிசிஐ மருத்துவக் குழுவும், சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com