

வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப் - சாஹிப்சாதா பர்ஹான் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து 63 ரன்களை எடுத்திருந்த பர்ஹானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 5, ஹசன் நவாஸ் 33, ஹுசைன் தாலத் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் ஆகா மற்றும் முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.