

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த ஒருநாள் தொடரில் வங்கதேசம் அணி 2-1 என வென்று தொடரை கைப்பற்றியது.
அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 14.2 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தவ்ஹித் ஹிருடோய் 33 ரன்னும், லிட்டன் தாச் 26 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் ஜோஷ் கிளார்க்சன் 3 விக்கெட்டும், நாத்ன் ஸ்மித், பென் சீர்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய நியூசிலாந்து அணி 11.4 ஓவரில் 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
33 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நியூசிலாந்து அணியை பெவன் ஜேக்கப்ஸ் அதிரடியாக ஆடி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.