பதோனி அதிரடி அரை சதம்- ஐதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார்.ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதோனி அதிரடி அரை சதம்- ஐதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ
Published on

ஐதராபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல்- டி காக் களமிறங்கினர். 2 ரன்னில் டி காக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 3 ரன்னில் வெளியேறினார். 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் கேஎல் ராகுலுடன் குர்ணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

குர்ணால் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்திருந்த போது 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். டெஸ்ட் போட்டி போல விளையாடிய கேஎல் ராகுல் 33 பந்துகளில் 29 பந்துகளில் வெளியேறினார்.

இதனையடுத்து பதோனி மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். பதோனி 55 ரன்களிலும் பூரன் 48 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com