

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி-குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். அவர் 32 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை வாஷிங்டன் சுந்தர் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 4-வது வரிசையில் களம் இறங்கிய சுந்தர், ஆரம்பம் முதலே டெல்லி பந்துவீச்சாளர்களைத் துல்லியமாக எதிர்கொண்டார். ஜோஸ் பட்லருடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த அவர், வெறும் 30 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார்.
2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.