சிவகங்கை தொகுதி கண்ணோட்டம்

5 முறை காங்கிரசும், 4 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், 2 முறை இந்திய கம்யூனிஸ்டும் வென்ற சிவகங்கை தொகுதி கண்ணோட்டம்.
சிவகங்கை தொகுதி
சிவகங்கை தொகுதி
Published on

சிவகங்கை.

இந்த பெயரை உச்சரித்ததும் அனைவரது நினைவுக்கும் வருவது மருது சகோதரர்கள்தான். சிவகங்கை தொகுதி 1952 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாக்கள், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியுடன் காரைக்குடி தாலுகாவை சேர்ந்த கீரணிப்பட்டி, வரிவயல், கூத்தலூர் சேது, ரெகுநாதபட்டினம், பிலார், தேவபட்டு, கல்லல், செம்பனூர், அரண்மனை சிறுவயல், குருந்தம்பட்டு, சன்னவனம், வேப்பங்களம், விளாவடியேந்தல், ஆலாம்பட்டு, மாலைகண்டான் மற்றும் வெற்றியூர் ஆகிய பகுதிகள் சிவகங்கை தொகுதியில் அடங்கி உள்ளன.

இந்த தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,99,118. ஆண்கள் 1,47097, பெண்கள் 1,52,021, மூன்றாம் பாலினத்தவர் 4.

சிவகங்கை தொகுதியில் 5 முறை காங்கிரசும், 4 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், 2 முறை இந்திய கம்யூனிஸ்டும், ஒருமுறை சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் முக்கிய தொகுதி விவசாயம். இதனை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளனர். ஆனால் வறட்சி காரணமாக விவசாயம் சரிவர நடப்பதில்லை. இதனால் இங்குள்ள பலரும் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.

சிவகங்கையில் முன்பு பல நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் இவை மூடப்பட்டதால் பகுதி மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

கோரிக்கை

சிவகங்கை மக்களின் நீண்டகால கனவாக இருப்பது கிராபைட் தொழிற்சாலை. சிவகங்கை பகுதியில் கிடைக்கும் கிராபைட் தாது உலகிலேயே மிகசிறந்த வகையானது. இதனை தற்போது வெட்டி எடுத்து சுத்திகரிப்பு பணி மட்டும் இங்கு நடக்கிறது. ஆனால் இதனை பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இங்கு தொடங்கப்பட்டால் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கை

மேலும் சிவகங்கை அருகே தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.  அரசனூர் பகுதியில் அமைக்கப்படும் சிப்காட் அறிவிப்போடு நின்று போனது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத சூழல் இத்தொகுதியில் உள்ளது.

சிவகங்கையில் முக்கிய பிரச்சினை குடிநீர். ஒரு நாள் விட்டு ஒருநாள் வழங்கப்படும் குடிநீரை தினமும் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டாலும் தடையின்றி நகராட்சி சார்பில் குடிநீர் வழங்க முடியாதது வேதனையானது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு வர மறுக்கிறது. இந்த திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்துடன் நின்று விடுகிறது. இதனை சிவகங்கையோடு இணைக்க வேண்டும். மாவட்ட தலைநகராக சிவகங்கை இருந்தாலும் இங்கிருந்து தொலைதூர ஊர்களுக்கு பஸ்கள் இல்லை. இப்படி தொகுதியில் பல்வேறு குறைகள் உள்ளன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அரசு செவிலியர் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி போன்றவை தொடங்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தேர்தல் வெற்றி

1952- சுவாமிநாதன் (காங்கிரஸ்)

1957- மன்னர் சுப்பிரமணியராஜா (சுயேட்சை)

1962- சுவாமிநாதன் (காங்கிரஸ்)

1967- சேதுராமன் (தி.மு-.க.)

1971- சேதுராமன் (தி.மு-.க.)

1977- சுப்பிரமணியன் (காங்கிரஸ்)

1980- சுப்பிரமணியன் (காங்கிரஸ்)

1984- சுப்பிரமணியன் (காங்கிரஸ்)

1989- மனோகரன் (தி.மு.க.)

1991- முருகானந்தம் (அ.தி.மு.க.)

1996- தா.கிருஷ்ணன் (தி.மு.க.)

2001- சந்திரன் (அ.தி.மு-.க.)

2006- குணசேகரன் (இந்திய கம்யூ.)

2011- குணசேகரன் (இந்திய கம்யூ.)

2016- பாஸ்கரன் (அ.தி.மு.க.)

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com