

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 209 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 210 எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சென்னை அணிக்கு எதிராக அதிக முறை வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கேப்டனாக அதிக வெற்றிகளைப் பெற்றவர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 12 முறை (22 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
அதனை தொடர்ந்து ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் கவுதம் கம்பீர் தலா 6 வெற்றிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் அணி கடந்த ஆண்டு முதல் முறையாக இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.