

ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 80 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய அனிகேத் சர்மா 18 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். கிளாசன் 31 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபி அணி சார்பில் ஜேக்கப் டபி, ரொமாரியோ ஷெப்பர்டு தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தேவ்தத் படிக்கல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு விராட் கோலி ஒத்துழைப்பு அளித்தார். அதிரடியாக ஆடிய படிக்கல் 20 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 26 பந்தில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
2வது விக்கெட்டுக்கு விராட் கோலி-படிக்கல் ஜோடி 101 ரன்கள் சேர்த்தது. அடுத்து இறங்கிய ரஜத் படிதார் 12 பந்தில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆர்சிபி அணி 15.4 ஓவரில் 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.