

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்குப் பின்னடைவு ஏற்படும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடையாததால், தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கடந்த சீசனில் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜோஷ் ஹேசில்வுட் (22 விக்கெட்டுகள்). தற்போது அவருக்குத் தொடைப் பகுதி மற்றும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், முதல் இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது. இவருக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி அல்லது நுவான் துஷாரா களமிறங்க வாய்ப்புள்ளது.
அதேபோல சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும், முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் இருக்கும் பேட் கம்மின்ஸ், முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் 3 முதல் 5 போட்டிகளைத் தவறவிடக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் பிரைடன் கார்ஸ் அல்லது எஹ்சன் மலிங்கா அணியில் சேர்க்கப்படலாம்.
கம்மின்ஸ் இல்லாத நிலையில், இஷான் கிஷன் தற்காலிகமாக அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மார்ச் 28-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த முக்கியமான ஆட்டத்தில் இரு அணிகளின் நட்சத்திர பந்துவீச்சாளர்களும் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்த பின்னரே இவர்கள் அணியுடன் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.