ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் அணியில் இணைந்த 13 வயது இளம் வீரர்

கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தோடு காணப்படுகிறார். அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார்.
ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் அணியில் இணைந்த 13 வயது இளம் வீரர்
Published on

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இணைந்து, அணியுடன் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றனர்.

இந்த வரிசையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அறிமுக வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தில் காணப்படுகிறார். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

வைபவ் சூர்யவன்ஷி அணியில் இணைந்தது பற்றி பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், "வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அகாடமி மைதானத்தில் அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார். அவரது பவர்-ஹிட்டிங் குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் எழுந்தன. வேறென்ன கேட்க முடியும்?"

"அவரது பலத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவும், அவருடன் ஒரு சகோதரர் போல் இருக்க வேண்டும். அவர் பங்களிப்பை வழங்க தயாராக காணப்படுகிறார். அவரை சிறப்பாக வைத்துக் கொள்வதே முக்கியமானது. டிரெசிங் ரூமில் நல்ல எண்ணோட்டம் நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியில் விளையாடுவார்."

"தற்போது அவர் ஐ.பி.எல்.-இல் விளையாட தயாராக இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவர் அடிக்கும் சில ஷாட்கள் மிகவும் அபாரமாக உள்ளன. எதிர்காலம் அவருக்கு எப்படி இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்," என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com