

ஐபிஎல் 2024 சீசன் தொடக்க விழா இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. சுமார் அரை மணி நடத்திற்கு மேலாக திரைப்பட பிரபலங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
விழா தொடங்கியதும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தேசிய கொடியுடன் அந்தரத்தில் இருந்து பறந்து வந்தார். அவரிடம் இருந்து தேசியக்கொடியை பெற்றுக் கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் தேசியக் கொடியை பெற்று மேடையின் உயரமான இடத்தில் நாட்டினார்.
அதன்பின் இருவரும் இணைந்து இந்தி பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை பரவசப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் தனது மகனுடன் இணைந்து மேடை ஏறினார். ஏ.ஆர். ரகுமான், அவரது மகன் அமீன், சுவேதா மோகன் உள்ளிட்டோர் இணைந்து பல பாடல்களை பாடினர்.
அதன்பின் பிசிசிஐ தலைவர், செயலாளர், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் மேடை ஏற்றப்பட்டனர். இரண்டு அணி கேப்டன்களான டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் மேடை ஏறினர். கெய்க்வாட் நடப்பு சாம்பியன் கோப்பையுடன் மேடைக்கு வந்தார்.