ஸ்மிருதி மந்தனா அபாரம் - முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

முதலில் ஆடிய இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகி விருது வென்ற ஸ்மிருதி மந்தனா
ஆட்ட நாயகி விருது வென்ற ஸ்மிருதி மந்தனா
Published on

ஹோவ்:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதமடித்து 50 ரன்னுடன் களத்தில் இருந்தார். டேனி வியாட் 43 ரன் அடித்தார்.

இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுடன் விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா ஜோடி சேர்ந்தார். பாட்டியா அரை சதம் அடித்த நிலையில் அவுட்டானார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.

அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இந்திய மகளிர் அணி 44.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி விருது பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com