

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.
தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அயர்லாந்தும், தொடரை சமன் செய்யவேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி களமிறங்கியது.
பெல்பாஸ்ட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 154 ரன்களை எடுத்தது.
155 ரன்களை துரத்திய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் அயர்லாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்றது குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்தியா தோற்றது என்பதை விட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இரு போட்டிகளிலும் களமிறக்கப்படவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கத்திற்கு முக்கிய காரணம்.
ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி காட்டிய 15 வயது வைபவ், இந்த டி20 தொடரில் இந்திய அணி சார்பில் விளையாடுவாரா என கடைசிவரை சஸ்பென்ஸ் வைக்கப்பட்டது.
இருப்பினும் முதல் போட்டியிலேயே அவர் களமிறக்கப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அந்த போட்டியில் அயர்லாந்திடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
சரி, இரண்டாவது போட்டியிலாவது களமிறக்கப்படுவார் என பார்த்தால் அதுவும் இல்லை. அவர் மட்டும் ஆகியிருந்தால் இந்தியா வெல்ல வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும் என ரசிகர்கள் அபிப்பிரியப்படுகின்றனர்.
அவர் களமிறக்கப்படாததற்கு அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரை ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
அவர்கள் நினைத்திருந்தால் வைபவ் களமிறங்கி அணியின் ஸ்கோரை எளிதாக உயர்த்தியிருப்பார் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி பிற கிரிக்கெட் பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டர் சஞ்சய் மஞ்ரேக்கர், சூர்யவன்ஷி தவிர்க்கப்பட்டதில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார். அவரை தவிர்க்கும் முடிவு சரியானது அல்ல என தெரிவித்துள்ளார்.
சூர்யான்ஷ் செட்ஜே மற்றும் பிரின்ஸ் யாதவ் இந்த சர்வதேச டி20 தொடரில் முதல் முறையாக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டபோது வைபவுக்கு தனது முதல் சர்வதேச டி20 தொடரில் களமிறங்க வாய்ப்பு மறுக்கப்பட்டது அனைத்து தரப்பிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.