

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இருந்து வருகிறார். இவர் தலைமையில் இந்திய அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர், ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்றது. அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான தோல்விகளையும் சந்தித்தது.
இந்நிலையில், கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார்.
கம்பீர் குறித்து பேசிய கங்குலி, "கிரிக்கெட்டில், கம்பீரின் ஆக்ரோஷ குணம் அனைவரும் அறிந்ததே. ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும், அவரின் ஆக்ரோஷம் பல சமயங்களில் சாதகமாக அமைந்தாலும், களத்தில் மோதல்கள் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. கம்பீர் இந்த அளவு முரட்டுத்தனமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.