முதல் டெஸ்டில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்- சூர்யகுமார் யாதவ் இடம்பெற வாய்ப்பு

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அய்யர் விலகியிருந்தார். 2-வது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
முதல் டெஸ்டில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்- சூர்யகுமார் யாதவ் இடம்பெற வாய்ப்பு
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரது மறுவாழ்வுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com