ஆந்திராவில் தேசிய வலுதூக்கும் போட்டியில் துப்புரவு பணியாளர் தங்கம் வென்று சாதனை

பகலில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்கிறார். மாலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுகிறார்.
ஆந்திராவில் தேசிய வலுதூக்கும் போட்டியில் துப்புரவு பணியாளர் தங்கம் வென்று சாதனை
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ராஜமகேந்திராவரத்தை சேர்ந்தவர் ஆர்ஜித பாலகிருஷ்ணா. இவர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

மும்பையில் நடந்த தேசிய சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் கிளாசிக் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 74 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பகலில், ராஜ மகேந்திர வரம் நகரில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்கிறார். மாலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுகிறார். துப்புரவு பணியாளர் ஆர்ஜித பாலகிருஷ்ணா மாவட்ட மற்றும் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.

"நான் வேலைக்குச் செல்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன். நான் ஒப்பந்தத் தொழிலாளி, மாதச் சம்பளம் ரூ.15,000. வலுதூக்கும் போட்டி ஒரு விலையுயர்ந்த விளையாட்டு. என்னிடம் ஒரு பைசா கூட மீதம் இல்லாத நாட்கள் உண்டு.

ஆனால் எனது நண்பர்கள் கடினமான காலங்களில் எனக்கு ஆதரவளித்துள்ளனர். சுமார் 22,000 ரூபாய்க்கு ஆடைகளை வாங்குவதற்கு அவர்கள் எனக்கு கடன் கொடுத்துள்ளனர்.

10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடர முடியவில்லை எனது தந்தை கூலி தொழிலாளி, எனது சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். என் மனைவி, மகன் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயை நான் ஆதரிக்க வேண்டும். இதனால், என்னால் சத்தான உணவை உட்கொள்ள முடியவில்லை.

துப்புரவு பணிகளை முடித்துவிட்டு ஜிம்மிற்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறேன். சாய் பவர் ஜிம்மில் எனது பயிற்சியாளர் சத்யநாராயணா மற்றும் வாலிபால் பயிற்சியாளர் சதீஷ் ஆகியோர் எனக்கு ஆதரவாக நின்று நிதி சிக்கல்களை சமாளிக்க உதவினார்கள்.

மாநில அரசு நிதியுதவி அளித்து விளையாட்டில் அதிக இலக்குகளை அடைய உதவ வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com