

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த விநாயகர் பூஜையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது விநாயகர் பெருமான் நேரில் தோன்றி “ அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூஜைகளைச் செய்.
அவர்களுக்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூஜைகளைச் செய்து விநாயகர் அகவலையும் பாடினார். விநாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரருக்கும், சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.
விநாயகர் அகவல் விநாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன் யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.