கும்பகோணத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்கள்

கும்பகோணத்தில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.
கற்கடேஸ்வரர் ஆலயம்
கற்கடேஸ்வரர் ஆலயம்
Published on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.

மன நோய் அகல..

சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்து வழிபட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம், திருவிடைமருதூர். இத்தல இறைவன் மகாலிங்கம் என்று அைழக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, மன நோய் அகலும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டால் அதற்கான தீர்வு கிடைக்கும். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, இத் திருத்தலம்.

புற்றுநோய் தீர

கும்பகோணம் அருகே உள்ளது திருந்துதேவன்குடி. இங்கு கற்கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது இந்திரனால் வழிபடப்பட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவியின் திருநாமம் ‘அருமருந்து அம்மை’ என்பதாகும். இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான நிவாரணி. அதிலும் குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக இது கருதப்படுகிறது.

கடன் தொல்லை நீங்க..

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சேறை. இங்கு ‘ரிண விமோச்சனர்’ என்ற நாமத்துடன் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்து விதமான கடன் தொல்லைகளும் நீங்கிவிடும். இறைவனை வழிபடுவதோடு, இத்தல மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைர வரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

வழக்குகளில் இருந்து விடுபட..

திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பான ஒன்று. இவர் அனைத்து சங்கடங்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர். இந்த இறைவன், சூலினி- பிரத்தியங்கரா என தன் இரண்டு தேவியர்களுடன் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சரபரை 11 விளக்கேற்றி, 11 முறை சுற்றி வந்து, தொடர்ச்சியாக 11 வாரங்கள் வழிபாடு செய்தால் வழக்குகள் சாதகமாகும். சுகமான வாழ்வு அமையும்.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர..

கும்பகோணத்தை அடுத்துள்ளது ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும். ஆனால் இந்த ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். அவ்வளவு சிறப்புக்குரியது இந்தத் திருத்தலம். இந்த ஆலயத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரு கிறார்கள். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனிகளுக்கான பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்யதால் நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு- கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இத்தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், இறைவியையும், மகாலட்சுமியையும் வணங்கி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com