

அழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பெருந்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அன்னம், சிம்மம், அனுமார், கருடன், சேஷ, குதிரை வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11-ம் திருநாளான நேற்று கோவிலின் உள் பிரகாரத்தில் மாதிரியாக அமைக்கப்பட்ட இடத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூமிதேவி, பெருமாளுக்கு பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.
அரசு வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் கோவில் உள் பிரகாரத்தில் தெப்ப உற்சவ விழா நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று (புதன்கிழமை) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.