

ராமேசுவரம் கோவில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அம்பாள் தபசு மண்டகப்படியில் இருந்து பல வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி திட்டக்குடி, நடுத்தெரு, மேல வாசல், வடக்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதற்காக கோவிலின் ஆஞ்சநேயர் சன்னதியில் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து கோவிலின் தெற்கு கோபுரம் அருகே உள்ள புதிய திருக்கல்யாண மண்டப மண மேடையில் ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினார்கள். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க இரவு 8 மணிக்கு ராமநாதசாமி, அம்பாள் கழுத்தில் மஞ்சள்கயிறும் திருமாங்கல்யம் அணிவித்தும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கல்யாணம் முடிந்தபின் சாமி-அம்பாளுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜை நடைபெற்றது. திருவிழாவில் வருகிற 2-ந் தேதி சாமி-அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்ககேடயத்தில் கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர்பாத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு சாமி மீண்டும் கோவிலுக்கு வந்த உடன் திறக்கப்படும். அன்று முழுவதும் பக்தர்கள் யாரும் தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் இணைஆணையர் மங்கையர்கரசி தெரிவித்துள்ளார்.