

சாகா வரம் பெறுவதற்காக அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வலி தாங்காத வாசுகி பாம்பு விஷத்தை கக்கியது. அச்சமயத்தில், கடலில் இருந்தும் விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காலம்' என்ற நீல விஷமும், பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும்.
கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது. விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று பணிந்தார். சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.
அந்த ஆலகால விஷத்தை ஒரு கணநேரத்தில் உட்கொண்டார் சிவபெருமான். இதனால் ஈரேழு உலகிற்கும் பாதிப்பு வரும் என்று கருதிய பார்வதி, விஷம் முழுவதும் சிசனின் கழுத்திலேயே தங்குமாறு செய்தால். அன்றுமுதல் ஈசன், திருநீலகண்டர் என்றழைக்கப்பட்டார். விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.