பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on

கோவையை அடுத்த பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவமும், வெள்ளை யானை சேவை நடந்தது.

இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பட்டீசுவரர்- பச்சைநாயகி அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடு நடந்தது. மாலை 4 மணியளவில் பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பின்னர் பச்சை நாயகி, அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தேரோட்டத்தையொட்டி பேரூர் சின்ன கோவில் வீதியில் முத்துசிற்பி நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சிற்பி ஜெகன், பேரூர் முத்துதாமரை சக்திவேல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பேரூர் தேவேந்திர குல வேளாளர் சமூக மட அறக்கட்டளை சார்பில் பேரூர் பட்டீசுவரர் பெரிய தேருக்கு அணிவிக்கும் புதிய அலங்கார துணி மற்றும் குடைகள் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com