

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)
கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 6 மணி அளவில் சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர்.
தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவில் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருள,
பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் அறுபத்துமூவர் விழாவையொட்டி விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில்
நாயன்மார்களுடன் கபாலீசுவரர்- கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.
அவர்களுடன் திருவள்ளுவர், வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி
அம்மன் என பலரும் சேர்ந்து கொண்டு வீதி உலா வருகின்றனர்.
தொடர்ந்து 7-ந்தேதி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.