மங்கல வாழ்வருளும் மாரியம்மன் கோவில்

இந்த மாரியம்மன், விருப்பங்களை நிறைவேற்றும் இச்சா சக்தியாக அவதரித்த தலம் இதுவாகும். இந்த அன்னையை தரிசித்தால், பக்தர்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
மாரியம்மன்
மாரியம்மன்
Published on

அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ளது கோடந்தூர் கிராமம். இங்குள்ள நாய்க்கன்வலசு என்ற பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் ஒன்று இருக்கிறது. 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் மாரியம்மன், சுயம்புவாகத் தோன்றியவர். தன்னை தேடி வந்து வேண்டிக்கொள்பவர்களுக்கு, வேண்டிய வரத்தை அருளும் ஒப்பற்ற தேவியாக, இந்த அன்னை விளங்குகிறாள்.

இந்த மாரியம்மன், விருப்பங்களை நிறைவேற்றும் இச்சா சக்தியாக அவதரித்த தலம் இதுவாகும். இந்த அன்னையை தரிசித்தால், பக்தர்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இது ஒன்றும் பெரிய கோவில் இல்லை. ஒரு ஊஞ்ச மரத்தின் அடியில் அமர்ந்து மகா சக்தியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார், இந்த அன்னை. இங்கு ஊஞ்ச மரத்தில் இணைந்து வில்வ மரமும் இருப்பது ஆச்சரியமானதாகும். இந்த ஆலயத்தில் இருக்கும் அமைதி, நமக்கு மன நிம்மதியை வழங்குவதை நாம் உணர முடியும்.

அழகு கொஞ்ச அருள்பாலிக்கும் அம்மனை பார்த்தாலே மெய்சிலிர்க்கும். இந்த அம்மனை பவுர்ணமி தினத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பானது. பொருளாதாரத்தில் உயர்வு பெறவும், கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினை தீரவும், சுகப் பிரசவம் நடைபெறவும், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறவும், நோய் நொடி நீங்கவும், மன அமைதி கிடைக்கவும் அம்மனை பிரார்த்தனை செய்தால், அந்த பிரார்த்தனை விரைவிலேயே நடந்தேறுவதை பார்க்கலாம்.

இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்கள், தங்களின் மகள் அல்லது மகனின் ஜாதகத்தை, அம்மனின் திருவடியில் வைத்து வணங்கி வேண்டிச் செல்கிறார்கள். அவர்களின் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறுகிறது. இதையடுத்து அவர்கள் மணமக்களை அழைத்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கிறார்கள்.

அமைவிடம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. கரூர் சாலையில் உள்ள குருக்கத்தியில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும், வைரமடையில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலத்தை அடையலாம். பேருந்து வசதிகள் அவ்வளவாக கிடையாது. வாடகை வாகன வசதிகள் இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com