

இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக தாயுமானசுவாமி கோவிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க மாலை 5.30 மணிக்கு மேல் வீதிஉலா கொண்டு செல்லப்பட்ட கொடி, மலையின் நடு பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவில் கம்பத்தடி மண்டபம் சென்றடைந்தது.
மட்டுவார் குழலம்மையுடன் தாயுமான சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தின் அருகில் தாயுமானவர், மட்டுவார் குழலம்மை, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு முக்கிய பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு தங்க கொடி மரத்தில் தாயுமானசுவாமியின் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி கேடயம் வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல திருவிழா முடியும் வரை ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.