

இந்த விழா குறித்து பொதுமக்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பார்த்ததீர்த்த சுவாமி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன.
பின்னர் அங்கிருந்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ரத யாத்திரை ஊர்வலம் புறப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஓசூர், ஒகேனக்கல், பென்னகரம் வழியாக சேலம் சென்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மல்லசமுத்திரம், திருசெங்கோடு, திண்டுக்கல் வழியாக மதுரை வந்தது.
நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரதயாத்திரை ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், தென்காசி, ஆலங்குளம் வழியாக நேற்று மாலை நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை வந்தடைந்தது.
கோவிலில் தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடந்தது. பின்னர் அந்த சிலைகள் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டன. இந்த ரத யாத்திரைக்கு பக்தர்கள் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ரத யாத்திரை நெல்லை டவுன் 4 ரத வீதிகளையும் சுற்றி வந்தது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் சென்றது.