

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று ‘உலவாக் கோட்டை அருளியது‘ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
‘உலவாக் கோட்டை அருளிய லீலை’ புராணம் வருமாறு:-
மதுரையில் அடியார்க்கு நல்லார் என்ற அடியார் ஒருவர் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகு தான் உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். இதனால் அவரது செல்வம் வற்றிய போதும் கடன் பெற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார். ஒரு கட்டத்தில் கடனும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எனவே அவர் தனது மனைவியுடன் இறைவன் சோமசுந்தரரை தரிசனம் செய்த பின்பு உயிர் நீப்பது என நினைத்து கோவிலுக்கு சென்றார்.
அவரது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாகத் தோன்றி வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ளக் குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். இறைவன் தெரிவித்த படியே இருவரும் வீட்டிற்கு சென்றனர். அங்கு இறைவன் வழங்கிய உலவாக் கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளைக் கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர்.
இவ்வாறு புராணம் கூறுகிறது.
இன்று (புதன்கிழமை) பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.