ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாந்தி அபிஷேகம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 6-ந்தேதியில் இருந்து நடந்து வந்த 14 நாள் பிரம்மோற்சவ விழா சாந்தி அபிஷேகத்துடன் நிறைவு பெற்றது.
உற்சவர்களுக்கு சாந்தி அபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.
உற்சவர்களுக்கு சாந்தி அபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.
Published on

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 6-ந்தேதியில் இருந்து 14 நாட்கள் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனச் சேவை நடந்து வந்தது.

அதில் 13 நாட்கள் நடந்த கோவில் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் மற்றும் பக்தர்கள் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி ெசய்வதற்காக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் பிரதான அர்ச்சகர்கள் ‘ஸ்ரீ’ என்னும் சிலந்தி, ‘காள’ என்னும் பாம்பு, ‘ஹஸ்தி’ என்னும் யானை மற்றும் பரத்வாஜ் முனிவர், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் செய்தனர்.

அப்போது அலங்கார மண்டபத்தில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்தும், யாகம் வளர்த்தும் பூஜைகள் செய்தனர். உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ெபத்திராஜு மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com