

மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆடி பவுர்ணமியான நேற்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி கருப்பணசாமி கோவிலின் திருக்கதவுகள் மங்கள இசையுடன் மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. ராஜகோபுரத்தின் உள்ளே இருந்த பதினெட்டு படிகளிலும் பூக்கள், எலுமிச்சம் பழம், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அப்போது 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன.
இதைதொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது ஆகம விதிப்படி திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி நடந்தது. மலர் மாலைகளால் திருக்கதவுகள் அலங்கரிக்கப்பட்டன. கதவின் இருபுறமும் குதிரையில் கருப்பணசாமி இருப்பதுபோல் மலர்களால் அலங்கரி்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பக்தர்கள் யாரும் இதை காண அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமிக்கும், ஆடி அமாவாசைக்கும் மட்டுமே இந்த அழகர்கோவிலில் 18-ம்படி கதவுகள் திறக்கப்பட்டு மூடப்படுவது பாரம்பரியமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.