2025 REWIND: குட்டி வாழைப்பழத்தின் பெரிய லூட்டி!

கடந்த ஆகஸ்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்எங்களுக்கும் தூக்கம் வேணும்ல என சாம் ஆல்ட்மேனே கோரிக்கை விடுத்தார்.
2025 REWIND: குட்டி வாழைப்பழத்தின் பெரிய லூட்டி!
Published on

'நாட்டு மக்களுக்கு ஓர் முக்கியச்செய்தி' எனக்கூறி முக்கிய அறிவிப்புகளை மேளம் அடித்து பொதுமக்களிடம் தெரிவிப்பர் அரண்மனை ஊழியர்கள். அதுபோல கடந்த ஆகஸ்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிடுகிறார். அவர் தினம் ஒரு பதிவிடுவார். நீங்கள் எதை சொல்கிறீர்கள்? என கேட்பீர்கள்.

நான் சொல்வது 2025ஐயே திரும்பி பார்க்க வைத்த ஒரு பதிவை. அதாவது 3 வாழைப்பழங்களின் இமோஜை பகிர்கிறார். இதற்கு என்ன அர்த்தம், கூகுள் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்போகிறதா என காரசார விவாதம் நடைபெறுகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் டிரெண்டிங்கில் இருந்தது.

"கருவாடு ஒருநாள் சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும்" என்னும் நம் பழமொழிக்கு ஏற்ப அடுத்த மாதம் முழுவதும் இணையத்தை ஆட்டிப் படைத்தது கூகுளின் 'நானோ பனானா'. அதாவது இந்த நானோ பனானாவில் நமது புகைப்படத்தை பதிவிட்டு, என்ன ப்ராம்ட் வேண்டுமோ அதை உள்ளிட்டால், நாம் கேட்டதுபோல நம் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, 3டி லுக்கில் கிடைக்கும்.

இதனால் ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் திரும்பினாலும் NANO BANANA-ன் ஆதிக்கம்தான். சமூக ஊடகங்கள் முழுவதும் ஒரே ஏஐ இமேஜ்கள். 'என்னடா என்னைத் தவிர எல்லாரும் அப்டேட்டா இருக்கீங்க' என்ற அளவு நாம் அதனை பார்த்து வியந்திருப்போம்.

நடிகை சோனாக்ஷி சின்ஹா

பெண்கள் புடவை அணிந்துகொண்டு தலையில் பூ வைத்திருக்குமாறும், ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருக்குமாறும் மாறி மாறி புகைப்படங்களை பதிவிட்டு வந்திருப்பர். இதில் பல பெண்களும் இதற்கு முன்பு புடவை கட்டிக்கூட இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் புடவை கட்டியிருப்பது போலவும், மாடலிங் ஃபோட்டோஷுட் எடுத்திருந்தது போலவும் புகைப்படங்கள். 'போதும்டா சாமி என்னை விட்ருங்க' என்ற அளவிற்கு இணையம் முழுவதும் இந்த டிரெண்ட். 

ஒரு கட்டத்தில் குதிச்சர கைப்புள்ள என்பதுபோல, பொங்கியெழுந்தனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். நாங்களும் எவ்வளவுதான் தாங்குவது என, ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பது போல பதிவிட்ட ஃபோட்டோக்களை குறிப்பிட்டு, 'பெரிய நேரு பரம்பரை, சட்டையில் ரோசாப்பூ குத்தாம வெளிய வரவேமாட்டாரு' என்னும் கவுண்டமணி, செந்தில் காமெடி டயலாக்கும், நாம் சொன்னவாறு எடிட்டிங்கில் வரவில்லை என்றால், "படிக்க தெரிஞ்சா படி, தப்பு தப்பா படிச்சி அடிவாங்கி சாகாத சொல்லிட்டேன்" என ஏஐ-ஐ திட்டுமாறு மானஸ்தன் பட சரத்குமார், வடிவேலு பட காமெடியும், "பாஸ் பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரி பளபளனு இருக்கீங்க" என தலைநகரம் படத்தின் வடிவேலு காமெடி என மறுபக்கம் இணையத்தை தெறிக்கவிட்டனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். 

இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒருவன்தான். அவன் வேற யாரும் இல்லை நானோ பனானாவிற்கு முன்பு டிரெண்டான கிப்லி ஆர்ட். சாட்ஜிபிடியிடம் நம் புகைப்படத்தை கொடுத்தால் அனிமேஷன் வடிவில் கிடைக்கும். இதனை உலகம் முழுவதும் பயன்படுத்த தூக்கம் இல்லாமல் தவித்தது ஜாட்ஜிபிடி. ஆம் அனைவரும் தங்களுக்கு அனிமேஷன் புகைப்படம் வேண்டும் என முயற்சிக்க இணையதளமே முடங்கியது. எங்களுக்கும் தூக்கம் வேணும்ல என சாம் ஆல்ட்மேனே கோரிக்கை விடுத்தார். அந்தளவிற்கு இரவு, பகல் என பாராமல் புகைப்படத்தை பதிவேற்றி, எடிட் செய்து வந்தனர் பயனர்கள். ஒருவழியாக இப்போது பெருமூச்சு விட்டு இந்த டிரெண்ட்கள் நார்மலாகி விட்டன. 

ஆமா, சம்மந்தமே இல்லாமா இப்போ ஏ இத சொல்லிக்கிட்டு இருக்க என பலரும் கேட்கலாம். அது ஒன்றும் இல்லை. புத்தாண்டு வரவிருக்கிறது இல்லையா. அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பார்ப்பதற்கு முன் 2025-ஐ ஒரு ரீவைண்ட் பார்ப்போம். அதற்காகத்தான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com