2025 REWIND: 'தீப்பொறி திருமுகம்' ஃபார்முலாவை பின்பற்றிய ஜோரான் மம்தானி?

நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர்.மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர்.
2025 REWIND: 'தீப்பொறி திருமுகம்' ஃபார்முலாவை பின்பற்றிய ஜோரான் மம்தானி?
Published on

"இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... சரி பின்னாடி திரும்பி பாப்போமேனு பாத்தா அந்த பக்கமு மழ" என்பது வடிவேலு காமெடி. அந்த மழைபோல 2025ல் எல்லா பக்கமும் பேசப்பட்டவர்தான் நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி. "மழ பெஞ்சா சுத்தியுதாண்டா பெய்யும்" என்ற பிரபுவின் பதில்போல, ஒரு நாட்டில் நடக்கும் முக்கிய செய்தி உலக நாடுகளுக்கு பரவும் அல்லவா. அப்படி பரவினார் மம்தானி.

நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர். ஆளும்கட்சியை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர் நியூயார்க் மேயர் ஆகிறார். உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் மேயர் தேர்தல் நடக்கும். எந்தக் கட்சியின் உறுப்பினராவது வெற்றிப் பெற்றுதான் ஆகவேண்டும். அவர்கள் பதவி ஏற்பார்கள். ஆனால் மம்தானிக்கு மட்டும் எப்படி இவ்வளவு பிரபலம் கிடைத்தது? நம்பர் 1 டிரெண்டிங் ஆனது எப்படி? 

"பில்டப் பண்ட்ரனோ, பீலா விட்ரனோ அது முக்கியமில்ல. நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மல உடனே திரும்பி பாக்கணு" எனும் வடிவேலு வசனத்திற்கு ஏற்ப தனது நடவடிக்கைகள் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் மம்தானி. குஜராத் கலவர வழக்கில் மோடியை பகிரங்கமாக விமர்சித்தவர். இஸ்ரேல் - காசாப் போரில் காசாவுக்கு ஆதரவாக பேசினார். மற்றொரு முக்கிய விஷயம் மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர். அதாவது உடை, உணவு, இருப்பிடம், இலவசப் பேருந்து சேவை என மக்களின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்தியாவில் மும்மொழிக் கொள்கையால், பல்வேறு பிரச்சனைகள் எழுத்தொடங்கின. தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கலில் ரூபாய் குறியீடு எல்லாம் மாற்றப்பட்டு ரூ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் பெரும் பூகம்பம் வெடித்தது. இதற்கு காரணம் ஹிந்தி திணிப்பு எனவும் வாதங்கள் வைக்கப்பட்டன.

இந்த புயல் ஓயத்தொடங்கிய சில மாதங்களில் அமெரிக்காவில் ஹிந்தியில் ஓட்டு கேட்டவர் மம்தானி. இவற்றையெல்லாம் தாண்டி மிக முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலை, இந்திய அரசியலை கையிலெடுத்தார். அதாவது புதிதாக வரும் கட்சிகள், எப்படி ஆளும் கட்சியை விமர்சித்து கவனம் பெறுகிறதோ, அதுபோல அமெரிக்காவின் முக்கிய தலை, அதாவது அதிபர் டிரம்புக்கும் நேரடி தாக்குதான்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் தனது பதவி ஏற்பு விழாவில் நேருவின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். இது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்தது. இதுபோன்ற செயல்களால் இளம் வயதினர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் மம்தானி தனது பெயரை உச்சரித்த விதம் "The Name Is M-A-M-D-A-N-I" என்ற சொற்கள் பாடலாகவே வைரலானது. தற்போதுவரை வைரலாகிக்கொண்டுதான் இருக்கிறது. 

இப்படி, யாரு சாமி நீ? என அனைவரும் ஆச்சயர்ப்பட்டு கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நியூயார்க் மேயர் மம்தானி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com