2025 REWIND: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வுகள்

ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற வந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்தார்.
2025 REWIND: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வுகள்
Published on

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர். இருப்பினும் ஒரு மாணவர் மேடையில் ஆளுநரை வெளிப்படையாக அவமதித்தது இது முதல் முறையாகும்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி...

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 759 பேருக்கு பட்டம் வழங்கினார்.

அப்போது, ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதால் நான் அவரிடம் இருந்து பட்டம் பெறுவதை விரும்பாமல் துணைவேந்தரிடம் பட்டம் வாங்கினேன். எனக்கும் அவருக்கும் எந்தவிட ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதால் நான் இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிகழ்வு பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜன் என்பவரின் மனைவி ஜீன் ஜோசப், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என கூறி உள்ளார். காலம் காலமாக கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க.வினர் அரங்கேற்றி வரும் நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மாணவி ஒருவர், ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல. அவரது கொள்கை பிடிப்பும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. இருப்பினும், சபை நாகரிகம் என்பதும் முக்கியமானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் செயல், ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும், தனிமனித அணுகுமுறை என வரும்போது சபை நாகரிகமும் முக்கியம். தமிழையும், தமிழ் மக்களையும் ஆளுநர் அவமதித்து பேசி வருகிறார். இதனால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த பிஎச்.டி மாணவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் இருக்கும்போது, பட்டம் வழங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினருக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

சிலர் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பாகப் பார்க்க, பலர் இது போன்ற ஒரு புனிதமான விழாவை அவமதிப்பது சரியல்ல என கருத்து தெரிவித்தனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் புகார் அளித்த மாணவர்...

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்.14-ந்தேதி 39-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.

அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர் பிரகாஷ் அளித்த மனுவில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி அறிஞர்களை ஆராய்ச்சி அறிஞர்களாகக் கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி அறிஞர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகள் உள்ளன. ஆனால் அது பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.

வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள சில வழிகாட்டிகளுக்கு பணம், உணவு, தங்கம் வழங்குகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்

இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பல்கலையில் முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேலைகளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com