2025 REWIND: மறக்க முடியுமா..? பெண் மருத்துவரை சீரழித்து கொன்ற காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
2025 REWIND: மறக்க முடியுமா..? பெண் மருத்துவரை சீரழித்து கொன்ற காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு
Published on

நிர்பயா சம்பவத்தை எப்படி யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ.. அதேபோல், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் யாராலும் மறக்க முடியாது...!

கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ம் தேதி அன்று மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக பயின்று வந்த 31 வயதான பெண் மருத்துவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி இரவு பணியில் முடித்துவிட்டு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூட்டத்தில் அதிகாலை 3 மணியளவில் உறங்கச் சென்றார்.

மறுநாள் காலையில், அவர் தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கொல்கத்தாவில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலத்தை தாண்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல்.. மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். 

மருத்துவர்களுக்கும், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லை என அரசாங்கத்தை கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். இதனால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அடுத்த கட்டத்தை எட்டியது. காவல்துறையினர் விசாரணைக் குழுவை அமைத்தனர். தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி ஆய்வை தொடர்ந்து, அதே மருத்துவமனையில் தன்னவார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்ற நபரை அதிரடியாக கைது செய்தனர்.இதைதொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்.

உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கொல்கத்தா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அதோடு, ஒரு தேசிய விசாரணைக் குழுவை அமைத்தது. 

போராட்டங்களின் எதிரொலியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையைத் தொடர்ந்தும், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்றப்பட்டது.

சிபிஐ தனது விசாரணையில், சஞ்சய் ராயை மட்டுமே பிரதான குற்றவாளியாக உறுதி செய்தது. இதற்கிடையே, சிபிஐ வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை கைது செய்தது. முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் மீது சிபிஐ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி அன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளதி என சியால்டா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் ஜனவரி 20ம் தேதி அன்று குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார். ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு மேற்கு வங்க அரசு ₹17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இந்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.

இருப்பினும், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சிபிஐ தரப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பமும், சிபிஐயும் அவருக்கு மரண தண்டனை கோரி வருகின்றனர்.

மேற்கு வங்க அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இதே கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது, ஆனால் சிபிஐயின் மனுவை ஏற்று விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன் மீதான பிரதான விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை உறுதி செய்யலாமா அல்லது சிபிஐ கோரியபடி மரண தண்டனையாக மாற்றலாமா என்று முடிவு செய்யும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com