என் மலர்tooltip icon

    Recap 2024

    2024 ரீவைண்ட் - தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை
    X

    2024 ரீவைண்ட் - தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை

    • ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே கொலை திட்டத்தை வடிவமைத்துள்ளார்.
    • ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ.10 லட்சம் வரை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது.

    இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிந்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 28 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 300 சாட்சியங்களை சேர்த்துள்ளனர்.

    அதில், பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் தேடப்படும் குற்றவாளிகள் என குறிப்பிட்டதோடு, அவர்களின் பெயர்கள் உட்பட 30 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றன.

    குற்றப்பத்திரிகையில் வடசென்னையை கலக்கிய பிரபல தாதா நாகேந்திரன், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் என பட்டியல் நீள்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விவரங்கள்:

    ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியிலும், சமூகரீதியிலும் அதிவேகமாக வளர்ந்துள்ளார். ஒருகாலத்தில் வடசென்னையில் தாதாவாக வலம் வந்த நாகேந்திரனுக்கு இது பிடிக்கவில்லை. அவர்களுக்குள் முன்பகையும் இருந்துள்ளது. மேலும், தனது மகனான அஸ்வத்தாமனுடன் நிலம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் பிரச்சனை செய்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் மகன் கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் எனவும் நாகேந்திரன் நம்பி உள்ளார்.

    இதனால் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே கொலை திட்டத்தை வடிவமைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு எதிரானவர்களைத் தேடி உள்ளார். அப்போதுதான், ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு, அவரது தம்பி பொன்னை பாலு ஆம்ஸ்ட்ராங் மீது வன்மத்தில் இருப்பது தெரியவந்தது.

    பிரபல ரவுடியான சம்போ செந்திலும் ஆம்ஸ்ட்ராங் மீது பகையில் இருந்துள்ளார். இதையடுத்து, கொலை திட்டத்தை சிறையில் இருந்தவாறே நாகேந்திரன் விரிவுபடுத்தியுள்ளார்.

    அதன்படி, நேரடியாக களத்தில் சென்று கொலை செய்யும் பொறுப்பு பொன்னை பாலு தரப்பினருக்கும், பணத்தின் ஒரு பகுதியை கொடுப்பதோடு நாட்டு வெடிகுண்டு உட்பட கொலைக்கான ஆயுதங்களை ஏற்பாடுசெய்யும் பொறுப்பு சம்போ செந்திலிடமும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு அஸ்வத்தாமனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

    கொலையாளிகள் 6 மாதமாக ('ரெக்கி' ஆபரேஷன்) ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அதன்பிறகு, யாருக்கும் சந்தேகம் வராதபடி ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் சென்று அவரை கொலை செய்துள்ளனர்.

    வேலூர் சிறையில் இருந்து நாகேந்திரன் சிகிச்சைக்கு வெளியே வரும்போது ஒன்றுகூடி கொலை திட்டம் குறித்து கொலையாளிகள் விவாதித்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ.10 லட்சம் வரை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர்.

    ஆற்காடு சுரேஷ் மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு விரைந்து செயல்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணை நடத்தப்பட்டு கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் 63 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1½ கோடி பணமும் ரொக்கமாக ரூ. 80 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×