மீண்டும் ஒரு இளம் நடிகை தற்கொலை! சின்னத்திரையில் அதிர்ச்சி!

‘கும்மும் பாக்யா’ தொடர் நடிகை சஞ்சிதா உகலே தற்கொலை.. தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை..
SanchitaUgale
Published on

பிரபல இந்தி தொலைக்காட்சித் தொடர்களான 'கும்மும் பாக்யா', 'வாக்லே கி துனியா' ஆகியவற்றில் நடித்து புகழ்பெற்ற 22 வயது இளம் நடிகை சஞ்சிதா உகலே, தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் இந்தி சின்னத்திரை உலகினரிடமும் அவரது ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நாலாசோபரா கிழக்கு பகுதியில் உள்ள சாய் சந்தோஷி கட்டிடத்தில் நடிகை சஞ்சிதா உகலே வசித்து வந்தார்.

நேற்று மாலை 7:00 மணி முதல் 7:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், அவர் தனது படுக்கையறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு, சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அச்சோல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் பாக் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரது குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு வசாய்-விரார் நகராட்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

வழக்குப்பதிவு மற்றும் விசாரணை..

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சஞ்சிதாவின் தந்தை மச்சிந்திர உகலே அளித்த புகாரின் அடிப்படையில், அச்சோல் போலீசார் இன்று பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 194-ன் கீழ் விபத்து மரண வழக்காக பதிவு செய்துள்ளனர்.

தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சஞ்சிதாவின் திரைப்பயணம்..

ஜீ டிவியின் மிக நீண்ட தொடரான 'கும்மும் பாக்யா'வில் 'தியா தாண்டன்' என்ற கதாபாத்திரத்திலும், 'வாக்லே கி துனியா' தொடரில் 'ருசிதா ஜெய்ட்லி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துப் பிரபலமானார். டங்கல் டிவியின் 'தில்வாலி துல்ஹா லே ஜாயேகி' தொடரில் கதாநாயகியாக நடித்தார்.

விக்கி கௌஷல் நடித்துள்ள ‘சாவா’ திரைப்படத்தில் இளம் வயது தாரா ராணி கதாபாத்திரத்திலும், மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘சைலன்ஸ் 2’ படத்திலும் நடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com