வேலூர் விருதம்பட்டில் வாலிபர் வெட்டிக்கொலை - இளம்பெண்ணுக்கு வலை

வேலூர் விருதம்பட்டில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ரத்தக்கறை படிந்த வீட்டில் இருந்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வேலூர்:

காட்பாடி வஞ்சூரை சேர்ந்த கருணாகரன் மகன் சுனில் (வயது 28). விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பாலாற்றங்கரையில் உள்ள விவசாய நிலத்தில் சுனில் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.டி.எஸ்.பி துரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சுனில் தலை முழுவதும் கத்தியால் வெட்டிய காயங்கள் இருந்தன. அவரது மேல் சட்டை இல்லை. சம்பவ இடத்தில் ஏராளமான மது பாட்டில்கள் கிடந்தன. உடலில் அதிக வெட்டுக்காயங்கள் இருந்தாலும் அந்த இடத்தில் ரத்தக்கரை இல்லை. இதனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு இங்கே வீசி சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் சுனில் உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீடு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் அந்த வீட்டை திறந்து உள்ளே சென்றனர். வீட்டு சுவர் முழுவதும் ரத்தக்கறைகள் இருந்தன. வீட்டின் படிக்கட்டு பின்புறம் கழிவறைக்கு செல்லும் பகுதி என அனைத்து இடங்களிலும் ரத்த கறைகள் இருந்தன.

வீட்டு தரைப்பகுதியில் ரத்தம் சிந்திய இடங்களில் தண்ணீர் ஊற்றி கழுவிய தடயங்களும் இருந்தது. இதன் மூலம் அந்த வீட்டுக்குள் வைத்து சுனிலை ஓட, ஓட வெட்டிக்கொலை செய்துவிட்டு பாலாற்று கரையில் உள்ள விவசாய நிலத்தில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த வீட்டில் கணவனை பிரிந்த இளம்பெண் ஒருவர் வாடகைக்கு வசித்து வந்தார். அவர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.

இளம்பெண் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விருதம்பட்டை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட சுனில் மீது 3 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com