

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த செட்டி மண்டபம் வெங்கடேசா நகரை சேர்ந்தவர் எழிலன் (வயது 33). இவர் தமிழ்நாடு குடியரசு கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘மாட்டுக்கறி திருவிழாவுக்கு வாருங்கள்.. ருசியுங்கள்..’’ என்று பதிவிட்டார். இந்த பதிவு தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கள்ளப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் பொது மக்களுக்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், மத பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேஸ்புக்கில் பதிவிட்ட எழிலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலனை கைது செய்தனர்.