

கோவை:
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவரின் மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தினமும் கல்லூரிக்கு வேலைக்கு செல்லும் போது ராமநாதபுரம் கருப்பராயர் வீதியை சேர்ந்த மணிகண்டன்(23) என்பவர் அவரை பின் தொடர்ந்து வந்து போட்டோ எடுத்து மிரட்டினார்.
தினமும் இவ்வாறு போட்டோ எடுத்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்தார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகமாகவே இதுகுறித்து அந்த பெண் தனது தந்தையிடம் தெரிவித்தார்.
சம்பவத்தன்று அந்த பேராசிரியை தனது தந்தையுடன் ராமநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வாலிபரும் பின்தொடர்ந்து அங்கு வந்தார். இதை பார்த்த அந்த பேராசிரியையின் தந்தை எதற்காக இங்கு நிற்கிறாய்? தினமும் என் பெண்ணை பின்தொடர்ந்து வந்து போட்டோ எடுத்து தொல்லை கொடுக்கிறாய் என்று கேட்டார்.
இதில் அவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பேராசிரியையின் தந்தை ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.