

காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத் துள்ள கரடிஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட சூருளி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது35). லாரி டிரைவரான இவரது மனைவி நதியா (29). இவர்களுக்கு திருசிகா (7), சக்தி (3) ஆகிய 2 பெண்குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் லாரி டிரைவரான மாதேஸ் தற்போது ஆந்திராவுக்கு லோடு ஏற்றி கொண்டு சென்றுள்ளார். சப்பானிபட்டி உள்ள தனியார் நிறுவனத்தில் நதியா வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் குழந்தைகள் தூங்கிய பின்பு தூக்கில் தொங்கிய நிலையில் நதியா இறந்து கிடந்துள்ளார். இன்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து காவேரிபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து நதியாவை யாராவது அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.