

சென்னை:
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சார்பில் நேற்று உலக இதய தினம் அனுசரிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் இதய நோய் உள்ளவர்கள் எப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி ‘நம் இதயம் பேணுவோம், இதய நோய் தடுப்போம்’ என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:-
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதய நோய், சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்ய வேண்டும். தமிழக சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கையால் ஓமந்தூரார் மருத்துவமனை மட்டுமல்லாமல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதய நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஓமந்தூரார் மருத்துவமனையில் இதுவரை 19 ஆயிரத்து 361 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு 17,667 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதில் 5,390 பேர் சர்க்கரை, ரத்த கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ் உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.