

சிவகாசி:
சிவகாசி காரனேசன் காலனி மற்றும் நேரு காலனி பகுதியில் நேற்று அதிகாலை 2 பேர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் சிவகாசியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அர்ஜூன், முருகன் என தெரியவந்தது.
காலையில் பணிக்கு புறப்பட்டு வந்த இவர்களை யார் வெட்டிக்கொலை செய்தார்கள்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் மோப்ப நாய் துப்பு துலக்கியபோது அர்ஜூன் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய நாய், முருகன் பிணமாக கிடந்த இடம் அருகே வந்தது. பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் ஓடியது.
தனித்தனி இடங்களில் உடல்கள் கிடந்தாலும் ஒரே கும்பல்தான் கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
கொலையான அர்ஜூன், முருகனின் செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவர்களுடன் யாரேனும் பிரச்சினையில் ஈடுபட்டு வந்தனரா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சிவகாசி போஸ் காலனி, எம்.ஜி.ஆர். நகர், முத்துராமலிங்க புரத்தை சேர்ந்த 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒருவர் அரசியல் கட்சி பிரமுகர் ஆவார்.
பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அர்ஜூன், முருகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.