நலத்திட்டங்களை பெற பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும் - கண்காணிப்பு அலுவலர் பேச்சு

அரசின் திட்டங்களை பெற பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா தெரிவித்தார்.
நலத்திட்டங்களை பெற பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும் - கண்காணிப்பு அலுவலர் பேச்சு
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் கிராம சுயாட்சி இயக்க விழா, கலெக்டர் லதா தலைமையிலும், மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்க பொறுப்பு அலுவலர்கள் பத்மா கணேசன், மனோஜ் பதக் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவையொட்டி 13 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 156 குழுக்களுக்கு ரூ.32½ லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி கடனும், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தில் சூரியச்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் மானிய திட்டத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினையும் வழங்கியதுடன், 13 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 537 பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஆணையினையும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதிநிர்மலா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள் கிராமப்பகுதிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் கிராம சுயாட்சி இயக்கம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 13 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பு முகாம் அமைத்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 7 வகையான திட்டங்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் மத்திய அரசின் திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்பகுதியிலுள்ள பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்பதே இதுபோன்ற திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுவினரைச் சேர்ந்த உறுப்பினர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை கோட்டாட்சியர் ராமபிரதீபன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விஜயநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com